புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு: ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் புஸ்சி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
சென்னை ,
திருச்சியில் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்டோர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் புஸ்சி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘‘திருச்சியில் செப்டம்பர் 13-ந்தேதி த.வெ.க. பிரசார கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்க சென்றபோது, அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்தேன். அப்போது, கூட்டம் கூடிவிட்டது. இது வேண்டுமென்றே செய்யவில்லை. கோவிலுக்கு அருகே வாகனத்தை நிறுத்துவது ஒன்றும் குற்றம் இல்லை'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தார். பின்னர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரிப்பதால், அவர் முன்பு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரை செய்தார். இந்தநிலையில், இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார். அதுவரை புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக உத்தரவிட்டார்.






