ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன்: அன்புமணி


ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன்: அன்புமணி
x
தினத்தந்தி 3 Sept 2025 6:05 PM IST (Updated: 3 Sept 2025 7:01 PM IST)
t-max-icont-min-icon

ராமதாஸ் மனதை புண்படுத்தியதாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு தரப்பில் 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன

சேலம்,

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சமாதானம் நடத்திய போதும் இருவருக்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

ராமதாஸ் - அன்புமணி மோதல் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 2026 வரை தலைவராக அன்புமணியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரி பட்டானூரில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அப்போது ராமதாஸ் மனதை புண்படுத்திய அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு தரப்பில் 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு விளக்கம் தர அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அன்புமணி தரப்பு பதில் அளிக்கவில்லை. மேலும் இதற்கு வழங்கப்பட்ட கெடுவும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது.

பாமக நிர்வாகக் குழு இன்று கூடியது. ராமதாஸ் தலைமையில் இன்று குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10 ஆம் தேதி வரை காலக்கெடு அளிப்பதாக ராமதாஸ் பேட்டி அளித்தார். முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளர். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி இந்த தகவலை தெரிவித்தார்.

1 More update

Next Story