இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்


இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
x

2027-ம் ஆண்டு தொடக்கத்தில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

குமரி,

குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

இந்தியாவிற்காக விண்வெளி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு அரசு முதற்கட்ட அனுமதி வழங்கி உள்ளது. 52 டன் எடை கொண்ட இந்திய விண்வெளி மையம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு கொண்டு சென்று நிறுவப்பட உள்ளது. இதற்கான முதல் ராக்கெட் வருகிற 2028-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்.

பின்னர் 4 ராக்கெட் மூலம் விண்வெளி மையம் எடுத்து செல்லப்பட்டு 2035-ம் ஆண்டு நிறுவப்படும். இதற்கான சோதனை இந்த ஆண்டு வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் மார்க் 3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட தொலை தொடர்பு செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படும்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக 3 ஆளில்லா ராக்கெட் அனுப்பி வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் முதல் ராக்கெட் அனுப்பி சோதனை செய்யப்படும். 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story