கோவையில் சர்வதேச ஆக்கி மைதானம்: உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்

ஆக்கி போட்டிகள் நடத்த வசதியாக 6 மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கோவையில் சர்வதேச ஆக்கி மைதானம்: உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்
Published on

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஆக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கி மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவிலும் ஆக்கி போட்டிகள் நடத்த வசதியாக 6 மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு மின்கோபுர விளக்கிலும் 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர மைதான வளாகத்தில் வீரர்கள், வீராங்கனைகளுக்கான உடை மாற்றும் அறை, ஓய்வறை, கழிப்பறை ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆக்கி மைதானத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்காக தொட்டியும் கட்டப்பட்டு உள்ளது.

இந்த ஆக்கி மைதானத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் (30-ந் தேதி) திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் சிறிதுநேரம் அங்கு ஆக்கி விளையாடுகிறார். அதனைத்தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com