அதிகார மமதையில் எளிய மக்களை ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல - நயினார் நாகேந்திரன் கண்டனம்


அதிகார மமதையில் எளிய மக்களை ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல - நயினார் நாகேந்திரன் கண்டனம்
x

கோப்புப்படம் 

மகளிரை அவமதிக்கும் தி.மு.க. அரசு இனியாவது திருந்தட்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை

தேனி மாவட்டம் மண்ணூத்து பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பேசிய ஆண்டிப்பட்டி தி.மு.க. எம்.எல்.ஏ. மகாராஜன், "மக்களின் மனம் அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று மகளிர் விடியல் பயணத் திட்டம். நான் முன்பு கூறியதுபோல், பெண்கள் அனைவரும் அரசு பஸ்சில் 'ஓசி'யில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு செல்லுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும்" என்று கூறினார்.

கட்டணமின்றி பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்வதை 'ஓசி' என்று விமர்சித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று தி.மு.க.வைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜா விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன் முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை "ஓசி" என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் "ரூ.1,000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க" என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் துரை முருகன் "அம்மாவுக்கும் ரூ.1,000, பொண்ணுக்கும் ரூ.1,000" என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!

ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ தி.மு.க. தலைவர்கள் காட்டாதது ஏன்?

அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் தி.மு.க. அரசு இனியாவது திருந்தட்டும்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story