ஜாக்டோ-ஜியோ போராட்டம்: துரோகத்திற்கான தண்டனையில் இருந்து தி.மு.க தப்ப முடியாது - அன்புமணி ராமதாஸ்


ஜாக்டோ-ஜியோ போராட்டம்: துரோகத்திற்கான தண்டனையில் இருந்து தி.மு.க தப்ப முடியாது - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 10 Nov 2025 10:25 AM IST (Updated: 10 Nov 2025 10:57 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ&ஜியோ அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்களிடம் முந்தைய அரசு குறித்த கொந்தளிப்பையும், தி.மு.க. மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இப்போது துரோகம் செய்வது கண்டிக்கத்தக்கது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ந்தேதி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டமும், அதன் பிறகும் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து அரசு ஊழியர்கள் அமைப்புகளும், ஆசிரியர்கள் அமைப்புகளும் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை. அதுமட்டுமின்றி, இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வால் வாக்குறுதியாக அளிக்கப்பட்டவைதான். அந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்த வேண்டிய தேவையே எழுந்திருக்காது.

ஆனால், உண்மை நிலை என்னவென்றால், 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக திமுக 10 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நலநிதி ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்ற ஒற்றை வாக்குறுதி மட்டும்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீதமுள்ள 9 வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க.வால் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கால கட்டங்களில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நடத்திய போராட்டங்கள் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு, ஒடுக்கப்பட்டனவே தவிர, அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட இன்று வரை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு செய்த அப்பட்டமான நம்பிக்கைத் துரோகங்கள், மோசடிகள், ஏமாற்று வேலைகள் ஏராளம்... ஏராளம்.

தமிழ்நாட்டில் அரசுத்துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க முந்தைய ஆட்சியிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அறிக்கையும் பெறப்பட்டு விட்டது. அதனடிப்படையிலேயே தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதை செய்வதற்கு பதிலாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர் குழுவை அமைத்ததுதான் அரசு ஊழியர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் முதல் ஏமாற்று வேலை.

பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி குழு செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 18-ந்தேதி வரை 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த அக்குழு அதன் பிறகுதான் கருத்துக் கேட்புக் கூட்டங்களையே நடத்தியது. செப்டம்பர் இறுதியில் இறுதி அறிக்கைக்கு மாற்றாக, எந்த பரிந்துரையும் இல்லாத இடைக்கால அறிக்கையை மட்டுமே ககன்தீப் சிங் பேடி குழுவை தாக்கல் செய்ய வைத்தது தி.மு.க. அரசின் இண்டாவது மோசடி.

ககன்தீப்சிங் குழு அதன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தபோது, இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் கூடுதல் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் கூடுதல் காலக்கெடு தேவைப்படுவதாக தெரிவித்திருந்தது. ஆனால், அதன் பின் இன்றுடன் 42 நாட்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ககன்தீப் சிங் குழு இதுவரை அடுத்தக்கட்ட கலந்தாய்வைத் தொடங்கவில்லை. இது தி.மு.க. அரசின் வழிகாட்டுதலில் ககன்தீப் சிங் பேடி குழு நடத்தும் மூன்றாவது நாடகமாகும்.

இன்னும் 3 மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதற்குள்ளாக ககன்தீப்சிங் பேடி குழு, அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வது அல்லது தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன் அறிக்கையை பெற்றுக் கொண்டு முடிவெடுக்க கால அவகாசம் இல்லை என்று கூறி அரசு ஊழியர்களை ஏமாற்றுவதுதான் தி.மு.க. அரசின் திட்டம். திமுகவின் கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும்.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளிலும் உள்ள நியாயத்தை பாட்டாளி மக்கள் கட்சி உணர்ந்திருக்கிறது; அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், அரசு ஊழியர்களின் எந்தக் கோரிக்கையையும் வஞ்சக எண்ணம் கொண்ட கொடுங்கோல் தி.மு.க. அரசு நிறைவேற்றப்போவதில்லை என்பதுதான் உண்மை.

இந்த வஞ்சக எண்ணத்திற்கும், அரசு ஊழியர்களுக்கு இழைத்த துரோகத்திற்குமான தண்டனையில் இருந்து தி.மு.க. ஒருபோதும் தப்ப முடியாது. அந்த தண்டனை வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு கண்டிப்பாக கிடைக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமையும் போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாத அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பா.ம.க. நிறைவேற்றும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story