ஓடும் ரெயிலில் பயணியிடம் நகை திருட்டு: தம்பதி உள்பட 3 பேர் கைது

திருட்டு போன நகைகளை போலீசார் மீட்டனர்.
திருப்பூர்,
நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி (வயது 57). இவர் சம்பவத்தன்று இரவு தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து ரெயிலில் கோவைக்கு வந்து கொண்டு இருந்தார். அந்த ரெயில் போத்தனூர் அருகே வந்த போது இசக்கியின் மனைவி தலையில் வைத்து படுத்துஇருந்த பேக்கை, ஒரு சிறுவன் நைசாக திருட முயன்றான். அதை பார்த்த இசக்கி, சக பயணிகளின் உதவியுடன் அந்த சிறுவனை மடக்கி பிடித்தார். அப்போது அந்த சிறுவனுக்கு ஆதரவாக வாலிபர் ஒருவர் இசக்கியிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே இசக்கி, அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர், இசக்கியை தாக்கிவிட்டு சிறுவனுடன் இறங்கி தப்பி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த இசக்கி தங்களின் உடைமைகளை சோதனை செய்து பார்த்த போது பேக்கில் வைத்திருந்த 6 பவுன் தங்கநகைகளை காணவில்லை.
இதற்கிடையே ரெயில்வே ஊழியர்கள் வந்து, ரெயிலை நிறுத்தியது குறித்து இசக்கியிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அந்த ரெயில் 17 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக இசக்கி போத்தனூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது போத்தனூர் செட்டிப்பாளையம் பாரதிநகரை சேர்ந்த உஜாத்அலி (31), அவரது மனைவி சத்யா (25), அவர்களது உறவினரான 12 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. உடனே அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டன.






