வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு

மண் சரிவு ஏற்பட்டதால் ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோத்தகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.7 செமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. கல்லாறு, ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டதால், ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.






