‘உத்தர பிரதேசத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது’ - யோகி ஆதித்யநாத்

பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) மாநாட்டில், அந்த மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-
“கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது. இந்தியாவின் முன்னேற்றம் இன்று உலகை ஈர்க்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் மாறுவோம்.
ஒரு சமூகம் தனது மக்கள்தொகையில் பாதி பேரைப் புறக்கணித்தால் அது தன்னிறைவு பெற முடியாது. உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வந்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மாநிலத்தில் கலவரங்கள் நடந்தன. தொழிலதிபர்கள், பெண்கள், தொழில்கள், சந்தைகள் என எதுவும் பாதுகாப்பாக இல்லை.
8 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வந்தபோது, உத்தர பிரதேசத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தோம். இன்று, உத்தர பிரதேசத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு நிலைமை, நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. திருவிழாக்கள் அமைதியாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நபரும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






