தீபாவளிக்கு மறுநாள் இறைச்சி கடைகள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கோப்புப்படம்
ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் (21-ந்தேதி) மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படுவதாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல், ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






