கோவை புதிய மேம்பாலத்தில் இடையூறு: எஸ்.பி.வேலுமணி உள்பட 400 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை புதிய மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கோவை,
கோவை, அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை ரூ.1,791 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நீண்ட மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ந்தேதி திறந்து வைத்து, மேம்பாலத்தில் காரில் சென்றார். இந்த புதிய மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவினாசி ரோடு மேம்பால திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது என்று கூறி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. வினர் உப்பிலிபாளையம் ரவுண்டானா அருகில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக நிகழ்ச்சி நடத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர்.ஜெயராம், செ.தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்ட 400 பேர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மேம்பாலம் இறங்குதளம் பகுதியில் இடையூறாக நிகழ்ச்சி நடத்தியதாகவும், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பொது இடத்தில் சட்டவிரோதமாக கூடுதல், பட்டாசு வெடித்தல், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்பட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






