விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதியை தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி,
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்ப்பது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த படகில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணச்சீட்டு பெறும் முறை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதியை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சுற்றுலா பயணிகள் www.psckfs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நுழைவு சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு செல்போனில் பயணத்திற்கான நாள், நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 பேர் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு பெற்று படகில் பயணம் செய்யலாம் என்றார்.






