தவெக கரூர் மா.செ. மதியழகனை 2 நாள் எஸ்ஐடி விசாரிக்க அனுமதி

தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கடந்த 29-ந்தேதி கைது செய்தனர்.
கரூர்,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடந்த த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் கடந்த 29-ந்தேதி கைது செய்தனர். மேலும் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக த.வெ.க. கரூர் நகர பொறுப்பாளர் மாசி என்கிற பவுன்ராஜையும் (34) போலீசார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த 30-ந்தேதி 2 பேரும் கரூர் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனிடம் இந்த வழக்கு குறித்து விசாரிக்க 5 நாட்கள் காவலில் எடுக்கக்கோரி சிறப்பு புலனாய்வு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.5 நாட்கள் கோரிய நிலையில் 2 நாட்கள் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்கு குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரூர் சம்பவத்தில் கைதான தவெக மாவட்ட செயலாளர் மதியழகனை 2 நாட்கள் காவலில் எடுத்தது எஸ்.ஐ.டி.






