சென்னையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. அதன்படி, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழர், பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே, பிரசார திட்டப்படி தவெக தலைவர் விஜய் வரும் 27ம் தேதி (சனிக்கிழமை) திருவள்ளூர், வடசென்னையிலும் அடுத்த மாதம் 25ம் தேதி (சனிக்கிழமை) தென்சென்னை, செங்கல்பட்டிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 27ம் தேதி வட சென்னையிலும், அடுத்த மாதம் 25ம் தேதி தென் சென்னையிலும் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு சென்னை மாவட்ட தவெக செயலாளர் கமிஷனர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது கமிஷனர் அலுவலகம் விரைவில் முடிவெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






