காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கத்தியால் குத்தி கொலை... ராமேசுவரத்தில் பயங்கரம்


காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கத்தியால் குத்தி கொலை... ராமேசுவரத்தில் பயங்கரம்
x

மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மாரியப்பனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி. இவர் ராமேசுவரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (21) என்ற வாலிபர் பள்ளி மாணவியை கடந்த சில நாட்களாக காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி அவரது தந்தை மாரியப்பனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து முனிராஜ் வீட்டிற்கு சென்ற மாரியப்பன் இளைஞரை கண்டித்துள்ளார்.

இந் நிலையில், இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி ஷாலினியை வாலிபர் வழிமறித்து காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாணவியோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை சற்று எதிர்பாராத மாணவி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து முனியராஜன் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறைமுக போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது காண்போரை கண் கலங்க செய்தது. காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story