பா.ம.க. அங்கீகாரம் விவகாரம்; தேர்தல் கமிஷனில் டாக்டர் ராமதாஸ் தரப்பு முறையீடு

தலைவர் பதவியில் இல்லாத ஒருவரின் குழுவுக்கு கட்சி அங்கீகாரம், சின்னம் ஒதுக்கி இருப்பது ஏற்புடையதல்ல என்று ராமதாஸ் தரப்பு கூறியுள்ளது.
புதுடெல்லி,
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் இருந்து ஒரு கடிதம் அன்புமணிக்கு அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் அன்புமணியை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து இருப்பதாக அக்கட்சியின் வக்கீல் பாலு தெரிவித்து இருந்தார். இது பா.ம.க. தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் முறையிட்டுள்ளது. பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், பொதுச்செயலாளர் முரளிசங்கர், சட்ட ஆலோசகர் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் கமிஷனரை நேற்று சந்தித்தனர். அப்போது, “தலைவர் பதவியில் இல்லாத ஒருவரின் குழுவுக்கு கட்சி அங்கீகாரம், சின்னம் ஒதுக்கி இருப்பது ஏற்புடையதல்ல. உரிய நடைமுறை இல்லாமல் அன்புமணிக்கு கடிதம் அளித்தது தவறு; அதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். மேலும், உரிய விசாரணைக்கு பிறகு அங்கீகாரம் வழங்க வேண்டும்” என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






