பழமையான 63 கோவில்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்


பழமையான 63 கோவில்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்
x
தினத்தந்தி 11 July 2025 3:07 PM IST (Updated: 11 July 2025 6:40 PM IST)
t-max-icont-min-icon

பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.07.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோவில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 3,297 கோவில்களில் குடமுழுக்கு, தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புனரமைத்தல், புதிய தேர்கள் உருவாக்கம் மற்றும் தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா,குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், .மலைக்கோவில்கள் மற்றும் முக்கிய கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மன்னர்களாலும், நமது முன்னோர்களாலும் கட்டப்பட்டு திராவிட கட்டடக் கலையின் பொக்கிஷங்களாக திகழும் தேவாரம் பாடல் பெற்ற மற்றும் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்கள், இதர கோவில்களின் கட்டடக் கலை மற்றும் கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களாக 714 கோவில்கள் கண்டறியப்பட்டு, அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டிற்கு ரூ.100 கோடி வீதம் ரூ.300 கோடியும், நடப்பாண்டிற்கு ரூ.125 கோடியும், என மொத்தம் ரூ.425 கோடியினை அரசு நிதியாக வழங்கியுள்ளார்.

அரசு நிதி, உபயதாரர் நிதி, கோவில் நிதி என மொத்தம் ரூ.571.55 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோவில்கள் பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டு, இதுவரை 60 கோவில்களுக்கு குடமுழுக்கு நிறைவுபெற்றுள்ளன. இவற்றில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தமைக்காக 2024-ஆம் ஆண்டிற்கான யுனஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை, மதுசூதனப்பெருமாள் கோவில், தூத்துக்குடி மாவட்டம், அப்பன்கோவில், வேங்கடத்தப்பன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்,

பிரம்மதேசம், கைலாசநாதசுவாமி கோவில், திருப்புடைமருதூர், நாறும்பூநாதசுவாமி கோவில், மானுார், அம்பலவாணசுவாமி கோவிலின் உபகோவிலான ராஜகோபாலசுவாமி கோவில், வடக்கு அரியநாயகிபுரம், கைலாசநாதசுவாமி கோவில், மேலச்செவல், ஆதித்தவர்னேஸ்வரர் கோவில், சேரன்மகாதேவி, அம்மநாதசுவாமி கோவில், சேரன்மகாதேவி, வைத்தியநாதசுவாமி கோவில், வள்ளியூர், சுப்பிரமணியசுவாமி கோவிலின் உபகோவிலான மீனாட்சி சொக்கநாதர் கோவில், கோவில்குளம், கிருஷ்ணசுவாமி வகையறா கோவிலின் உபக்கோவிலான தென்னழகர் கோவில், கடம்போடுவாழ்வு, கைலாசநாதசுவாமி மற்றும் வெங்கடாசலபதி கோவில்;

திருச்சி மாவட்டம், அல்லூர், பஞ்சநதீஸ்வரர் கோவில், அளுந்தூர், காசிவிஸ்வநாதசுவாமி கோவில், ஆலத்துடையான்பட்டி, சோமநாதசுவாமி கோவில், தஞ்சாவூர் மாவட்டம், பரிதியப்பர் கோவில், பாஸ்கரேஸ்வரர் கோவில், திருவாய்பாடி, பாலுகந்தநாதசுவாமி கோவில், உடையாளூர், கைலாசநாதர் மற்றும் லெட்சுமிநாராயணப் பெருமாள் கோவில், திருநரையூர், சித்தநாதசுவாமி கோவில், முழையூர், பரசுநாதசுவாமி கோவில், திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம், பாதாளேஸ்வரர் கோவில், கோட்டூர், கொழுந்தீஸ்வரசுவாமி கோவில், கோவில்திருமாளம், மகாகாளநாத சுவாமி கோவில், திருக்கொள்ளம்புதூர், வில்வாரண்யேஸ்வரர் கோவில்;

நாகப்பட்டினம் மாவட்டம், அம்பல், பிரம்மபுரீஸ்வரசுவாமி கோவில், கோடியக்காடு, அமிர்தகடேஸ்வரசுவாமி கோவில், மயிலாடுதுறை மாவட்டம், சாயாவனம், சாயாவனேஸ்வரர் கோவில், பல்லாவனம், பல்லாவனேஸ்வரர் கோவில், மேலப்பெரும்பள்ளம், வலம்புரநாதசுவாமி கோவில், கீழையூர், கடைமுடீஸ்வரசுவாமி கோவில், பெருந்தோட்டம், ஐராதீஸ்வதீஸ்வரர் கோவில், தலைச்சங்காடு, சங்கரணேஸ்வரர் கோவில், மூவலூர், மார்கசயேஸ்வரர் சுவாமி கோவில், மகேந்திரப்பள்ளி, திருமேனியழகர் கோவில்;

கடலூர் மாவட்டம், திருமூலஸ்தாணம், கைலாசநாதர் கோவில், ராஜேந்திரசோழகன், தோளீஸ்வரர் கோவில், திருவட்டத்துறை, தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருவேட்களம், பாசுபதீஸ்வரர் கோவில், திருச்சோபுரம், திருச்சோபுரநாதர் கோவில், திருவதிகை, வீரட்டானேசுவரர் கோவில், திருமாணிக்குழி, வாமனபுரீஸ்வரர் கோவில், திருவாமூர், பசுபதீஸ்வரர் கோவில், விழுப்புரம் மாவட்டம், வி.நெற்குணம், ஆளுடையநாயனார் கோவில், கப்பூர், செய்தருளீஸ்வரர் கோவில், டி.முடையனூர், அருணாசலேஸ்வரர் கோவில், கூகையூர், காரீயாம்புரீஸ்வரர் கோவில், கச்சிராப்பாளையம், வரதராஜப்பெருமாள் கோவில்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், கூகையூர், சொர்ணபுரீஸ்வரர் கோவில், எலவனாசூர்கோட்டை, அர்த்த நாரீஸ்வரர் கோவில், வரஞ்சரம், பசுபதீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், ரிஷபேஷ்வரர் கோவில், காஞ்சி, கரைகண்டீஸ்வரர் கோவில், பிரம்மதேசம் புதூர், ருத்ரகோட்டீஸ்வரர் கோவில், தாமரைப்பாக்கம், அக்னீஸ்வரர் கோவில்;

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், பச்சைவண்ணர் மற்றும் பவள வண்ணர் கோவில், காஞ்சிபுரம், அழகிய சிங்கபெருமாள் கோவில், திருவள்ளூர் மாவட்டம், செஞ்சி பானம்பாக்கம், ஜெனமேஜெயீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம், மண்ணீஸ்வரர் கோவில், வேலூர் மாவட்டம், அன்பூண்டி, திருத்தாளீஸ்வரர் கோவில், திருவலம், வில்வநாதீஸ்வரர் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர், திருக்குகேஸ்வரர் கோவில், பெருங்காஞ்சி, அகத்தீஸ்வரர் கோவில், காவேரிப்பாக்கம், அபயவரதராஜப் பெருமாள் கோவில்;

ஆகிய 63 கோவில்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான பணிகளை இன்றையதினம் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் நமது கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் காலப் பெட்டகங்களாக திகழும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களின் தொன்மை மற்றும் கட்டடக் கலை போன்றவற்றை வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள பேருதவியாக அமையும்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சி.பழனி, தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக காஞ்சிபுரத்திலிருந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், க. சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story