வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை... கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு

வெள்ளி விலை தாறுமாறாக எகிற தொடங்கி உள்ளது.
சென்னை,
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி இவற்றின் விலை தாறுமாறாக எகிற தொடங்கி உள்ளது. சமீபத்தில், தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோன்று வெள்ளி விலையும் கிலோ ரூ.2½ லட்சத்தை கடந்துள்ளது.
தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 890-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.9-ம், கிலோ ரூ.9 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.254-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கடந்த 11 நாட்களில் கிலோவுக்கு ரூ.52 ஆயிரம் அதிகரித்து உள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒருகிராம் ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு பவுன் 1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் இரு பொருளும் ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது.






