ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்.ஐ.ஆர். - கனிமொழி எம்.பி. பேச்சு


ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்.ஐ.ஆர். - கனிமொழி எம்.பி. பேச்சு
x

பெண் மீது பழிசுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகிவற்றை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து எஸ்.ஐ.ஆரை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீகாரில் நாம் தெளிவாகக் பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மக்களின் வாக்குரிமை எந்த அளவிற்கு பறிக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். நம்முடைய முதல்-அமைச்சர் அதற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை கொலை செய்யும் ஒரு முயற்சிதான், இந்த எஸ்.ஐ.ஆர். அதுமட்டுமில்லாமல், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல பிரச்சினைகளை உருவாக்கி, வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துதான் திராவிட முன்னேற்றக் கழகமும், கூட்டணி கட்சிகளும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும். இந்த சமூகம் முதலில் சில விஷயங்களில் பெண் மீது பழிசுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கையை முதல்-அமைச்சர் எடுத்து இருக்கிறார். அவர்களுக்கு மிக விரைவில், அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று முழு முயற்சியோடு முதல்-அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

'உடன்பிறப்பே வா’ சந்திப்பின்போது நானும் உடன் இருந்தேன். வெற்றி பெறவில்லை என்றால் யாருடைய பதவியும் பறிக்கப்படும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரையை ஒரு கட்சித் தலைவர் வழங்குவது என்பது நிச்சயமாக தேவையான ஒன்று. வெற்றி பெற வேண்டும், அதற்காக அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அனைவரிடமும் சொல்லி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story