எஸ்.ஐ.ஆர். விவகாரம்; ஊழல் குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப தி.மு.க. நாடகம் நடத்துகிறது - எல்.முருகன் விமர்சனம்

வாக்காளர்களின் பெயர்களை அவர்களின் அனுமதியின்றி தேர்தல் ஆணையம் எவ்வாறு நீக்க முடியும்? என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
பீகார் மாநிலத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டம் நடைபெறுவதாக கூறி இதற்கு எதிராக போராடிட, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதன்படி நேற்று சென்னை தியாகராய நகரில் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்ற நிலையில், நாம் தமிழர், த.வெ.க., பா.ம.க. உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப தி.மு.க. அரசு நாடகம் நடத்துகிறது என மத்திய மந்திரி எல்.முருகன் விமர்சித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“சட்டமன்ற தேர்தலுக்கு முன் எஸ்.ஐ.ஆர். நடத்தப்பட வேண்டும். இன்னும் 6 மாதங்கள் உள்ளன. உண்மையான வாக்காளர்கள் விடுபடக்கூடாது. அதே நேரத்தில் போலி வாக்குகள், நகல் வாக்குகள் மற்றும் இறந்தவர்களின் வாக்குகள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும். எனவே, எஸ்.ஐ.ஆர்.-ஐ புதுப்பிப்பது காலத்தின் தேவை.
எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள், பூத் நிலை அதிகாரிகள் உட்பட அனைவரும் உடனிருப்பார்கள். எஸ்.ஐ.ஆர்.-ஐ தி.மு.க. எதிர்க்கிறது, அப்படியானால் அது மாநில அரசு ஊழியர்களை நம்பவில்லை என்று அர்த்தமா?
வாக்காளர்களின் பெயர்களை அவர்களின் அனுமதியின்றி தேர்தல் ஆணையம் எவ்வாறு நீக்க முடியும்? எஸ்.ஐ.ஆர். இன்னும் தொடங்காதபோது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு கூற முடியும்? அனைவரும் வாக்காளர்கள்தான். சிறுபான்மை அல்லது பெரும்பான்மை வாக்காளர்கள் என்று எதுவும் இல்லை. தயவுசெய்து இதை அரசியலாக்க வேண்டாம்.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் மக்களை தவறாக வழிநடத்துவதும், அவர்களின் கவனத்தை திசை திருப்ப நாடகம் நடத்துவதும் தி.மு.க.வின் வழக்கமாகும். பண மோசடி குற்றச்சாட்டில் இருந்து மக்களை திசை திருப்ப தி.மு.க. விரும்புகிறது.”
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.






