பணம் வாங்கினால், கடுமையான நடவடிக்கை - தவெக நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை


பணம் வாங்கினால், கடுமையான நடவடிக்கை - தவெக நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Jan 2025 3:54 PM IST (Updated: 23 Jan 2025 8:52 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கட்சியில் பதவி வகிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் இதற்காக வாட்ஸ்அப் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

1 More update

Next Story