மாணவர் தற்கொலை: பள்ளி பேருந்துகள் எரிப்பு - நெல்லை அருகே பதற்றம்


மாணவர் தற்கொலை: பள்ளி பேருந்துகள் எரிப்பு - நெல்லை அருகே பதற்றம்
x
தினத்தந்தி 18 July 2025 7:51 AM IST (Updated: 18 July 2025 7:58 AM IST)
t-max-icont-min-icon

மாணவரின் உடல் வந்த வாகனத்துடன் நெல்லை-அம்பை பிரதான சாலையில் உறவினர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (15 வயது). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் சபரி கண்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் அந்த மாணவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 7-ந் தேதி வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்துவிட்டு சபரி கண்ணன் பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த சபரி கண்ணனை உடனடியாக மீட்டு, சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று சபரி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு மாணவரின் உடல் வந்த வாகனத்துடன் நெல்லை-அம்பை பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், காவல் துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மாணவரின் உறவினர்களில் சிலர் தனியார் பள்ளியின் இரண்டு பேருந்துகளை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story