தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - கவர்னர் உரையாற்றுகிறார்


தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - கவர்னர் உரையாற்றுகிறார்
x
தினத்தந்தி 6 Jan 2025 5:44 AM IST (Updated: 6 Jan 2025 6:01 AM IST)
t-max-icont-min-icon

இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும்.

அந்த வகையில், இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார். இதற்காக அவர் காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.20 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.

கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மைச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச்செல்வார்கள்.

சரியாக காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும். கவர்னரின் உரை சுமார் 45 நிமிடங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. அதனைத்தொடர்ந்து, அவரது உரையை தமிழில் சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் கூட்டம் நிறைவடையும். அதனைத்தொடர்ந்து, சபாநாயகர் அறையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீபத்தில் மரணம் அடைந்ததால், நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

அடுத்த 2 நாட்கள் (அதாவது 8, 9-ந்தேதிகள்) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசிப்பாரா? அல்லது உரையை புறக்கணித்து வெளியேறுவாரா? என்பது புரியாத புதிராக உள்ளது. அவரது நடவடிக்கையை பொறுத்து அந்த நேரத்தில் முடிவு செய்துகொள்ளலாம் என்பதில் அரசும் தக்க ஏற்பாடுடன் தயார் நிலையில் உள்ளது.

மேலும், இந்த கூட்டத்தொடரில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்தும் அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பாக எடுத்துக்கொண்டு விவாதிக்க கடிதம் கொடுத்துள்ளன. இந்த கூட்டத்தொடர், துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதத்துடன் சுமார் 1½ மாதங்கள் வரை நடைபெறும்.

1 More update

Next Story