டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை என்று வாதிடப்பட்டது.

சென்னை,

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இன்று (செவ்வாய் கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர், விசாரணையை தொடங்கிய அன்றே அமலாக்கத் துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கான நோக்கம் என்ன?.. சோதனைக்கு வந்த நாளில் முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை.

மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியிருந்த ஒப்புதல் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திரும்ப பெற்றதை அடுத்து மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை. இந்த முதல் தகவல் அறிக்கைகள் இல்லாமல் வாதங்களை முன்வைப்பது இயலாத காரியம்.

நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த தொடங்கினால் அந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்'' என்று வாதிட்டனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்கள் தூக்கி எறியயப்படுவார்கள்'' என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு அமலாக்கத் துறைக்கு தமிழ்நாடு அரசு உதவலாமே? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பி.எஸ்.ராமன், ''சட்டத்தை மீறி அமலாக்கத் துறை இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும்?.. அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார். அதற்கு என்ன அர்த்தம்? என்று கூறினார்.

இதையடுத்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை (FIR) தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தனர்.

1 More update

Next Story