நடிகை கவுரி கிஷனிடம் ஏளனமாக கேள்வி கேட்டது கண்டனத்திற்குரியது; பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் அறிக்கை

முகநூல் மற்றும் யூ டியூப்களில் பொது வாழ்வில் இருக்கும் பெண்களை பற்றி அவதூறாக பேசுவது, செய்தி வெளியிடுவது அநாகரிகமான செயல் ஆகும் என அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழகம் ஓர் உயரிய கலாசாரமும், பண்பாடும், பாரம்பரியமும் மிக்க மண். இந்த மண்ணில் பெண்களுக்கு என்று காலம் காலமாக ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால் அவற்றை குறைக்கும் விதமாக கவுரி கிஷன் விவகாரத்தில், யூ டியூபர் ஒருவர் கவுரி கிஷன் மனது புண்படும்படி கேள்வி கேட்ட விதம் அநாகரிகமானது. இது நம் சமூக வாழ்வியல் நடைமுறைக்கு ஏற்றதல்ல. இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமையை, சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்த அநாகரிக கேள்வியை கேட்ட செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
அதுபோல சமூக ஊடகங்கள் குறிப்பாக முகநூல் மற்றும் யூ டியூப்களில் பொது வாழ்வில் இருக்கும் பெண்களை பற்றி அவதூறாக பேசுவது, செய்தி வெளியிடுவது அநாகரிகமான செயல் ஆகும். இது போன்ற அநாகரிக செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொது வாழ்வில் உள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும், சட்டங்களையும் இயற்ற அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






