திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தென்பட்டன.
தூத்துக்குடி,
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
இதனால், கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தென்பட்டன. இருப்பினும் ஆபத்தை உணராத பக்தர்கள் சிலர், பாசிபடிந்த பாறைகள் மீது ஏறி நின்றவாறு தங்களது செல்போனில் புகைப்படங்களை எடுத்தனர்.






