18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ எந்த தடையும் இல்லை - ராஜஸ்தான் ஐகோர்ட்டு

இந்தியாவில் லிவ்-இன் உறவுமுறை என்பது சட்டவிரோதம் அல்ல என ராஜஸ்தான் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ எந்த தடையும் இல்லை - ராஜஸ்தான் ஐகோர்ட்டு
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும், 19 வயது இளைஞரும் லிவ்-இன் முறையில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த அக்டோபர் 27-ந்தேதி எழுத்துப்பூர்வமாக ஒரு ஒப்பந்தத்திலும் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் இவர்களின் இந்த உறவிற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த லிவ்-இன் ஜோடிக்கு அவர்களின் பெற்றோரிடம் இருந்து பல்வேறு மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, சம்பந்தப்பட்ட லிவ்-இன் ஜோடி தரப்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் தொடர்புடைய இளைஞருக்கு சட்டப்பூர்வ திருமண வயதான 21 வயது இன்னும் ஆகவில்லை என்பதால், சட்டப்படி அவர் திருமணம் செய்யவோ, அல்லது லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழவோ முடியாது என வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி எந்த தடையும் இல்லை. சட்டப்பூர்வ திருமண வயது என்பது ஒருவரின் தனியுரிமையை பறிக்காது. இந்தியாவில் லிவ்-இன் உறவுமுறை என்பது சட்டவிரோதமோ அல்லது குற்றச்செயலோ அல்ல. வயதுவந்தோரின் தனியுரிமை மற்றும் வாழ்வுரிமையை சட்டப்பிரிவு 21 பாதுகாக்கிறது. வாழும் இடத்தையும், வாழ்க்கை துணையையும் தேர்வு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.

18 வயதை கடந்த இருவர் சேர்ந்து வாழ முடிவு செய்தால், அவர்களின் முடிவில் அரசு தலையிட முடியாது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மனுதாரர்களுக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com