ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என மோசடி: பொதுமக்களுக்கு தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் ஆன்லைன் மோசடிகளால் ஏமாற்றப்பட்டால் உடனடியாக சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ல் புகார் பதிவு செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பாக Telegram, Instagram, Snapchat மற்றும் WhatsApp மூலமாக போலியான முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக திட்டங்களை பரப்பி வருகின்றனர்.
இந்த வகை மோசடிகளில் குற்றவாளிகள் Telegram மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு, அதிக லாபம் கிடைக்கும் என்று உறுதி அளித்து முதலீடு செய்ய தூண்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, முதலில் அவர்களை Telegram குழுக்களில் சேர்த்து, போலியான லாப ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் தவறான வெற்றி தகவல்களை பகிர்ந்து, உண்மையான வர்த்தக நடவடிக்கை போல் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
முதலீடுகளில் சிறு லாபங்களை காண்பித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர், அதிக தொகையை முதலீடு செய்யுமாறு கூறி, உண்மையான முதலீட்டு இணையதளங்களைப் போல் வடிவமைக்கப்பட்ட போலி வர்த்தக இணையதளங்களுக்கு வழிநடத்துகின்றனர். இத்தகைய போலி இணையதளங்களில் வர்த்தக விளக்கப்படங்கள் (candlestick) நேரடி விலை மாற்றங்கள் போன்றவை காட்டப்பட்டு அனைத்தும் உண்மையாக தோன்றும் வகையில் கையாளப்படுகின்றன. இதனை நம்பி அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்துகின்றனர். பின்னர் சைபர் மோசடியாளர்கள் அவர்கள் தொடர்பை துண்டித்துவிடுவதை அடுத்து பொதுமக்கள் தங்கள் முதலீட்டு பணத்தை திரும்பப் பெற முடியாமல் மோசடி அடைகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்சமயம் இதுபோன்று பொதுமக்களின் விரைவான லாப ஆசையை பயன்படுத்தி போலி இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்களின் மூலம் திட்டமிட்டு இவ்வகை ஆன்லைன் முதலீட்டு மோசடி புகார்கள் கணிசமாக அதிகரித்து வருவதால் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளுமாறு சைபர் குற்றப்பிரிவு கேட்டுக்கொள்கிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் எந்தவொரு ஆன்லைன் முதலீட்டு திட்டத்திலும் ஈடுபடும் முன் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, தெரியாத சமூக ஊடக தொடர்புகள் அல்லது சரிபார்க்கப்படாத இணையதளங்கள் மூலம் வரும் முதலீட்டு அழைப்புகளை தவிர்க்க வேண்டும். உறுதியான, விரைவான அல்லது மிக அதிக லாபம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். இவை மோசடியின் முக்கிய அறிகுறிகளாகும். SEBI அங்கீகாரம் பெற்ற இணையதளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட செயலிகள் மூலம் மட்டுமே முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் சந்தேகத்திற்கிடமான முதலீட்டு சலுகைகள் கிடைத்தாலோ அல்லது இதுபோன்று ஏமாற்றப்பட்டாலோ உடனடியாக சைபர் குற்ற உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மேற்சொன்ன புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மேலும் நிதி இழப்புகளை தவிர்த்து, குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






