தூத்துக்குடி: திருவிழாவில் கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது

சாத்தான்குளம் அருகேயுள்ள கோமாநேரி அம்மன் கோவில் அருகே வேகத்தடை அமைந்துள்ள பகுதியில் கார் டிரைவர் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கோமாநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முசுந்தரம் மகன் வேல்முருகன் (வயது 26). இவர் திருப்பூரில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்காக வந்திருந்தார்.
சம்பவத்தன்று இவர், கோவில் அருகே வேகத்தடை அமைந்துள்ள பகுதியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு பைக்கில் வந்த அதே பகுதி, வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் பரமசிவம்(37) என்பவர் திடீரென அவரை அரிவாளால் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். பலத்த காயமடைந்த வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்து, வேல்முருகனை அரிவாளால் வெட்டியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






