இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Oct 2025 5:23 PM IST
மறைந்த நடிகை மனோரமாவின் மகன் உடலுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
- 23 Oct 2025 5:21 PM IST
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
தூய்மை பணியாளர்களுக்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம். முதற்கட்டமாக சென்னையில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 23 Oct 2025 5:21 PM IST
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 2வது ஒருநாள் தொடர் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. வரும் 25ம் தேதி கடைசி போட்டி நடக்க உள்ளது.
- 23 Oct 2025 5:00 PM IST
20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என சொல்லப்பட்டது. ஆனால் வானிலை அமைப்பு நிலப்பரப்பு அருகில் வரும்போது வலுவடைவதில் பிரச்சினை ஏற்பட்டு, அதன் அமைப்பும், மழைக்கான கணிப்பும் மாறிப்போனது.
இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Oct 2025 4:55 PM IST
சைவ சமயத்தின் முதல் குரு.. நந்தி எம்பெருமானின் சிறப்புகள்..!
இறைவனின் திருவருளால் ஸ்ரீ நந்தி எம்பெருமானை மகனாகப் பெற்ற சிலாத முனிவர் இவருக்கு வைத்த பெயர் ஜெபேசர். பெருந்தவம் புரிந்து பிறந்த ஜெபேசரின் எட்டாம் வயதில் மரணம் சம்பவிக்கும் என்று திருவையாற்றில் இருந்த மித்ரர், வருணர் என்னும் இரண்டு முனிவர்கள் கூறியதைக் கேள்வியுற்ற சிலாத முனிவர் மிகவும் மனம் வருந்தினார். தந்தையின் மன வருத்தம் அறிந்த ஜெபேசர் திருவையாற்றில் உள்ள சூர்யதீர்த்தக் குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று சிவபெருமானை நோக்கி பத்து ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து இறைவனிடமிருந்து ஸ்ரீ நந்தி எம்பெருமான் என்ற பட்டமும் ஞான உபதேசமும் பெற்றார். மேலும் சைவ சமயத்திற்கு முதல் குருவாகவும் சிவசாரூபமும் சிவபெருமான் இவருக்கு தந்தருளினார்.
- 23 Oct 2025 4:45 PM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று இரவு 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து, 28,000 கன அடியில் இருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடையானது தொடர்ந்து 2-வது நாளாக நீடிக்கிறது. இதனிடையே பரிசல் இயக்க தடை விதித்தும் மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். நேற்று காலை முதலே ஒகேனக்கல்லில் மழை பெய்து கொண்டே இருந்ததால் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.
- 23 Oct 2025 4:20 PM IST
மம்முட்டியின் “களம்காவல்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'பசூக்கா' படம் வெளியானது. டீனா டென்னிஸ் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மம்முட்டி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் மம்முட்டியுடன் ஜெயிலர் படல் வில்லன் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘களம்காவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது
‘களம்காவல்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், ‘களம்காவல்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
- 23 Oct 2025 4:15 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி
தூய்மை பணியாளர்களின் நலனை காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவது அரசால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதனுடன், தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு இன்று அனுமதி அளித்து உள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்படும். அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
- 23 Oct 2025 3:36 PM IST
ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த “டியூட்” திரைப்படம்
பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‘டியூட்’. இந்த படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தநிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
- 23 Oct 2025 3:09 PM IST
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு
மராட்டியத்தின் நவி மும்பை நகரில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி உள்ளது.
















