இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Aug 2025 11:36 AM IST
உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை அடிவாரத்தில் இருந்து எடுத்துச் சென்று படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைபோல அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் 75 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
- 27 Aug 2025 11:33 AM IST
நாடுமுழுவதும் பதுங்கு குழிகளை அமைக்கும் துருக்கி
மத்திய கிழக்கு நாடுகள் மீது இஸ்ரேல் அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருவதன் எதிரொலியால், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துருக்கி அரசு நாடு முழுவதும் பதுங்கு குழிகளை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் துருக்கி உடன் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரேலிய அரசு அதிகாரிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
- 27 Aug 2025 11:30 AM IST
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறில் ஐ.டி. ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 27 Aug 2025 11:27 AM IST
புதிய பாடங்களை அறிமுகம் செய்தது அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் புதிய பாடங்கள் அறிமுகம் செய்துள்ளது. தொழில்துறை சார்ந்த பாடங்கள், AI, Data Science, Machine Learning, Re-Engineering for Innovation, Product Development, காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், தொழில்துறை தரநிலைகள், உடற்கல்வி படிப்புகள் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
- 27 Aug 2025 11:16 AM IST
பக்தர்களின் கவனம் ஈர்த்த 69 அடி உயர விநாயகர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கைரதாபாத் பகுதியில் 69 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இந்த விநாயகரை தரிசனம் செய்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தவண்ணம் உள்ளனர்.
- 27 Aug 2025 11:16 AM IST
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... நாடு முழுவதும் களைகட்டிய திருவிழா
நாடு முழுவதும் இன்று (27.8.2025) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொணடு விநாயகரை தரிசனம் செய்கின்றனர். இதனால் கோவில்களில் வழக்கத்தைவிட இன்று கூட்டம் அதிகாக காணப்படுகிறது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்கின்றனர்.
வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர். இதேபோல் கோவில்கள் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிசத், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், விதவிதமான பொருட்களைக் கொண்டு, விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து பிரமிக்க வைத்துள்ளனர்.
- 27 Aug 2025 11:14 AM IST
9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Aug 2025 10:55 AM IST
மது அருந்துவதில் மத்தியபிரதேச பெண்கள் முதலிடம்: காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு
மத்தியபிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
- 27 Aug 2025 10:34 AM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாடான வகையில் ஊதியம் வழங்கப்படுவது கண்ணியமற்ற செயல் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமான மாநில அரசுகள் தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இயங்குவதற்கு காரணமே கவுரவ விரிவுரையாளர்கள்தான். மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் உள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை 8,000-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துதான் தமிழக அரசு சமாளித்து வருகிறது.
பல கல்லூரிகளில் பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலையில், அத்துறைகளின் துறைத் தலைவர் பொறுப்புகளையும் கவுரவ விரிவுரையாளர்கள்தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.
- 27 Aug 2025 10:29 AM IST
அமலுக்கு வந்த அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் வரி; இந்தியாவுக்கு என்னென்ன பாதிப்புகள்?
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளால் அந்நாட்டுக்கு பொருளாதார வளம் சேருகிறது என்றும் அது போரை ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது.
















