இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Aug 2025 11:55 AM IST
ரஷியா - உக்ரைன் போருக்கு மோடிதான் காரணம் - அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பிதற்றல்
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
- 28 Aug 2025 11:18 AM IST
18 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 18 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, “திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர், கோவை, நீலகிரி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர்” மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 28 Aug 2025 11:17 AM IST
ஆவணி சுபமுகூர்த்தம் - ஆவணப் பதிவுகளுக்கு இன்றும் நாளையும் கூடுதல் டோக்கன்கள்
ஆவணி சுபமுகூர்த்த தினத்தினை ஒட்டி, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்றும், நாளையும் கூடுதல் வில்லைகளை ஒதுக்கி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 28 Aug 2025 11:16 AM IST
மத நல்லிணக்க வீடியோவால் சர்ச்சை
விநாயகர் சதுர்த்தியையொட்டி மராட்டிய சமூக வலைதள இன்புளூயன்சரான அதர்வா சுதாமே, இஸ்லாமியரின் கடையில் விநாயகர் சிலை வாங்குவது போல் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அது மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, அகில பாரதிய பிராமண மகாசங் போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து, அந்த வீடியோவை நீக்கிய அதர்வா சுதாமே, தனக்கு யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை என மன்னிப்பு கோரினார்.
- 28 Aug 2025 11:15 AM IST
ரூ.20.60 கோடிக்கு ஏலம் போன ரேஞ்ச் ரோவர் கார்
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட 2006 ரேஞ்ச் ரோவர் மாடல் கார், ஏலத்தில் ரூ.18 கோடியே 39 லட்சத்திற்கு ஏலத்தில் போன நிலையில், ஏலக் கட்டணத்துடன் சேர்ந்து ரூ.20 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- 28 Aug 2025 11:13 AM IST
அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: உரிய நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின்
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளித்துறை பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாற்று வழிகளை தேடி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 28 Aug 2025 11:07 AM IST
கூலி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி
கூலி திரைப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கோரி சன் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
- 28 Aug 2025 11:04 AM IST
மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னை மெட்ரோ ரெயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலுக்கான டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 28 Aug 2025 11:02 AM IST
இந்திய அணி குறித்து வெளிநாட்டு வீரர்கள் விமர்சனம்.. கவாஸ்கர் கடும் எதிர்ப்பு
வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்திய கிரிக்கெட் குறித்து கவலைப்பட வேண்டும்? என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- 28 Aug 2025 11:00 AM IST
உரிமை, நலன், வளர்ச்சிக்கான குரலாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் - செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்று எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், எனது தனிப்பட்ட சார்பாகவும். மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
சமூக நீதி, சமத்துவம், அன்பு, மனிதநேயம் ஆகிய தத்துவங்களை வழிகாட்டியாகக் கொண்டு, தந்தை பெரியார். அண்ணா, கலைஞர் ஆகியோரின் கோட்பாடுகளை மக்கள் வாழ்வில் செயலாக்கி வரும் அரிய தலைமைத்துவம் கொண்டவர் மு.க. ஸ்டாலின். கடந்த ஆண்டுகளில் கட்சியின் ஒற்றுமையையும் வலிமையையும் வளர்த்ததோடு மட்டுமல்லாது, தமிழக அரசியலில் மக்கள் நம்பிக்கையை பலமடங்கு உயர்த்தியுள்ளார்.
தமிழக மக்களின் உரிமை, நலன், வளர்ச்சி ஆகியவற்றிற்காக எப்போதும் உறுதியான குரலாக இருந்து வருகிறார். இந்நாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வெற்றிகரமாக எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும்,எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
















