தாய்ப்பால் குடிக்கும்போது விபரீதம்.. பச்சிளம் பெண் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

கோப்புப்படம்
டாக்டர்கள் வந்து குழந்தையை பரிசோதனை செய்தபோது, குழந்தை இறந்து போனது தெரியவந்தது.
வளசரவாக்கம்,
சென்னை வளசரவாக்கம், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 35). இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே 4-வது முறையாக கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரிக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர்.
நேற்று காலை ராஜேஸ்வரி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வந்து குழந்தையை பரிசோதனை செய்தபோது, குழந்தை இறந்து போனது தெரியவந்தது.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் குழந்தை இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.






