மாமல்லபுரம் அருகே கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்

மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருப்போரூர் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விமானத்தில் பயணித்த 3 பேர், பாராசூட் மூலம் முன்னதாகவே விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.
கோளாறு ஏற்பட்ட விமானம், கட்டுமானப் பணி நடைபெற்ற இடம் ஒன்றுக்கு அருகே சகதியில் விழுந்து நொறுங்கியது. ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில் விமானம் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. விமான விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானம் எங்கிருந்து வந்தது? எங்கே சென்றுகொண்டிருந்தது? கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை அருகே நேற்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சாலையில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.






