வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி: 99 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் - தேர்தல் கமிஷன் தகவல்

கோப்புப்படம்
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்காக அதே அளவில் கணக்கீட்டு படிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 கோடியே 35 லட்சத்து 99 ஆயிரத்து 698 படிவங்கள், அதாவது 99.20 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் நேற்று தெரிவித்தது. அவற்றில் 5 கோடியே 86 லட்சத்து 57 ஆயிரத்து 184 படிவங்கள் அதாவது 91.49 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 962 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எஸ்.ஐ.ஆர். பணியாற்றி வருகின்றனர். அங்கு 10 லட்சத்து 16 ஆயிரத்து 423 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 99.50 சதவீத படிவங்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அவற்றில் 9 லட்சத்து 61 ஆயிரத்து 500 படிவங்கள் அதாவது 94.12 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.






