சென்னையில் நாளை வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் செயல்படும் - மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

வாக்காளர்கள் சிறப்பு உதவி மையத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் சென்னை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers-BLOs) வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை (Enumeration Forms) வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், 18.11.2025 முதல் 25.11.2025 வரை எட்டு நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் அமைத்து பெரும்பாலான கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட்டது.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெற குறைந்த நாட்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026ன் பணிகளின் ஒரு சிறப்பு நடவடிக்கையாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை மீளப் பெறும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அதிக வாக்காளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பன்முக வளாகக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவம் பெறுவதற்கான வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் (Electors Special Help Desk) நாளை 29.11.2025 காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும்.
எனவே, வாக்காளர்கள் இந்த சிறப்பு வாக்காளர் உதவி மையத்தினைப் பயன்படுத்தி பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தினை விரைந்து வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






