ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு...65,000 கன அடியாக உயர்வு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 30,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 65,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 30,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 65,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






