எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் - பியூஷ் கோயல் பேட்டி

வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும் என பியூஷ் கோயல் கூறினார்.
சென்னை,
தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்தார். சென்னை லீலா பேலசில் தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் சுமார் ஒன்றரை மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், மத்திய மந்திரியும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு சிறப்பாக நடந்தது. 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்தோம். மக்கள் பணிகள் குறித்தும் ஆலோசித்தோம். மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம். வளர்ச்சி, வேலைவாய்ப்பே பாஜகவின் இலக்கு. 2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும். ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்.”
இவ்வாறு அவர் பேசினார்.






