“பாதிக்கப்பட்ட குடும்பங்களை எப்போது சந்திக்கிறார் விஜய்..?” - பதிலளித்த ஆதவ் அர்ஜுனா


“பாதிக்கப்பட்ட குடும்பங்களை எப்போது சந்திக்கிறார் விஜய்..?” - பதிலளித்த ஆதவ் அர்ஜுனா
x

தன் தாயின் இழப்புக்கு பின், இந்த 41 பேரின் உயிரிழப்பு தன்னை மிகவும் பாதித்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

சென்னை,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னர் முதல்முறையாக த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

என் தாயின் இழப்புக்கு பின்னர் கரூரில் என்னுடைய குடும்பத்தில் 41 பேரின் உயிரிழப்பு மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கிறது. தற்போது எதையும் பேசக் கூடிய மனநிலையில் நான் இல்லை. இதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். விரைவில் கரூர் சென்று பொதுமக்களை சந்திப்போம். அவர்களுடன் மிகப்பெரிய பயணம் தொடரும். வாழ்க

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து விஜய் எப்போது கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தயவு செய்து இன்னும் சில நாட்கள் பொறுத்திருங்கள்” என்று கூறினார்.

முன்னதாக ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளபதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டநிலையில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ்தளபதிவை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story