பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;
"ஆண்களுக்கு இணையாக பெண்கள் வெளியே வர வேண்டும். உயர் பொறுப்புகளில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருக்க வேண்டும். பெண்கள் அதிகம் வேலைக்கு செல்வதிலேயே நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு. மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது. பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை கலைஞர் கொண்டுவந்தார். சொத்தில் பெண்களுக்கு பங்கு, காவல்துறையில் பெண்கள் என நீண்ட பட்டியலை போட முடியும்.
திராவிட மாடல் ஆட்சியிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதில் முதன்மையானது கட்டணமில்லா விடியல் பயணம். இந்த திட்டத்தின் மூலம் பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் தோழிவிடுதிகள் திறக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் பெண் தொழில்முனைவோர்கள் அதிகரித்துள்ளனர்.
1.30 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இது மாபெரும் சாதனை. பெண்களின் உடல்நலனை காக்கவும் அதிக திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் உதவி செயலி தொடங்கப்பட்டுள்ளது. உலக மகளிர் உச்சி மாநாட்டில் தமிழ்நாட்டு பெண்களுக்கு நான் தரும் உறுதி என்னவென்றால், எனது தலைமையிலான அரசு பெண்கள் வேலைவாய்ப்பு, முன்னேற்றம், பாதுகாப்புக்காக உறுதியான கட்டமைப்பை வழங்கும்.”
இவ்வாறு அவர் பேசினார்.






