காதலனை கரம் பிடிக்க இலங்கையில் இருந்து கள்ளப்படகில் வந்த இளம்பெண்

காதலித்த வாலிபரை கரம்பிடிக்க கள்ளப்படகில் தமிழகம் தப்பி வருவது என முடிவெடுத்து உள்ளார்.
காதலனை கரம் பிடிக்க இலங்கையில் இருந்து கள்ளப்படகில் வந்த இளம்பெண்
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அரிச்சல்முனை கடற்கரையில் நின்றிருந்த அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா (வயது 25) என்பதும், இவர் ஏற்கனவே தனது தாய், தந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்ததும் தெரியவந்தது. அப்போது அவர், ஒரு வாலிபரை காதலித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விமானத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி இந்தியா வர விதுர்ஷியாவுக்கு விசா கிடைக்கவில்லையாம். இருப்பினும் தான் காதலித்த வாலிபரை கரம்பிடிக்க கள்ளப்படகில் தமிழகம் தப்பி வருவது என முடிவெடுத்து உள்ளார். இதற்காக அப்பெண் தனது நகையை விற்று இலங்கைப்பணம் ரூ.2 லட்சத்தை திரட்டி படகோட்டியிடம் கொடுத்து அவரது ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு தப்பி வந்ததாக தெரிவித்து உள்ளார். அந்த பெண்ணை இறக்கிவிட்டு படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றுவிட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அந்த பெண் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com