தூத்துக்குடியில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை: 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் ஒரு வாலிபர், நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் திடீரென அந்த வாலிபரிடம் தகராறு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் சிலோன் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் அஜய்(எ) ஜப்பான் (வயது 21). இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 3 வழக்குகள் உள்ளன. இவர் நேற்று இரவு பசும்பொன்நகர் 2-வது தெருவில் நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் திடீரென அஜய்(எ) ஜப்பானிடம் தகராறு செய்தனர்.
தகராறு முற்றிய நிலையில் அந்த கும்பல் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அஜய்யை சரமாரியாக குத்தினர். இதில் படுகாயமடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை அவரின் நண்பர் தடுக்க முயன்றபோதிலும் முடியவில்லை. இதையடுத்து 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுதீர், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொலையாளிகள் 3 பேர் யார்?, எதற்காக அஜய்யை கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நண்பருடன் பேசிக்கொண்டிருந்த வாலிபரை 3 பேர் கும்பல் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






