வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்

பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின்மேல் நேற்று நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அபால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப்பகுதிகளில் அடுத்த 2 தினங்களில் கடந்து செல்லக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






