சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில்... திடீரென வேகம் அதிகரித்த மோந்தா புயல்


சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில்... திடீரென வேகம் அதிகரித்த மோந்தா புயல்
x
தினத்தந்தி 27 Oct 2025 8:17 AM IST (Updated: 27 Oct 2025 1:13 PM IST)
t-max-icont-min-icon

புயல் அடுத்த 12 மணிநேரத்தில் வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல், மேற்கு-வடமேற்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும்.

புயலானது 3 மணிநேரத்திற்கும் மேலாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. இந்நிலையில், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 680 கி.மீ. தொலைவிலும் புயலானது நிலை கொண்டிருந்தது. இந்நிலையில், காலை 8.15 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 550 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ள புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின்னர், வடமேற்கே நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை தீவிர சூறாவளி புயலாக உருவெடுக்கும். தொடர்ந்து அது வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே வருகிற 28-ந்தேதி அன்று (நாளை) மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை (28-ந்தேதி) ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கரையை நெருங்கும்போது புயல் வலுவிழக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்படுவதால் ஆந்திராவில் காற்று பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஆந்திராவின் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான தெற்கு ஆந்திர பகுதியில் மிக கனமழையும், குறுகிய நேரத்தில் அதி கனமழையும் பதிவாகக்கூடும்.

புயலை முன்னிட்டு ஆந்திராவின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்பட தமிழக துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகம் என மொத்தம் 9 துறைமுகங்களில் கடந்த 25-ந்தேதி அன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்நிலையில், புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.

புயலை முன்னிட்டு, அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் கரைக்கு திரும்பும்படி முன்பே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. புயலை எதிர்கொள்வதற்காக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மதியம் 12.30 மணி நிலவரப்படி சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கே புயல் மையம் கொண்டுள்ளது. இதேபோன்று புயலின் வேகம் மணிக்கு 16 கி.மீ. என்பதில் இருந்து மணிக்கு 18 கி.மீ. ஆக அதிகரித்து உள்ளது.

1 More update

Next Story