சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் புயல் - வானிலை ஆய்வு மையம்

மோன்தா புயல் 110 கிலோமீட்டர் வேகத்தில் தீவிர புயலாக கரையை கடக்கும் என அமுதா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
நேற்று (26-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு 11:30 மணி அளவில் "மோன்தா" புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (27-10-2025) காலை 08:30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 5:30 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கே 890 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது.
இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28-ஆம் தேதி) காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை - இரவு நேரத்தில் -கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு இன்று ஆரஞ்ச் அலர்டும், நாளை திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை மாலை அல்லது இரவுக்குள் காக்கிநாடாவை சுற்றியுள்ள பகுதிகளில் கரையை கடக்கும். மோன்தா புயல் 110 கிலோமீட்டர் வேகத்தில் தீவிர புயலாக கரையை கடக்கும். இதன் காரணமாக அக்டோபர் 31 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.






