தமிழகத்தில் 25-ந்தேதி முதல் பருவமழை தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 25-ந்தேதி முதல் பருவமழை தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்
x

வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கிழக்கு திசை காற்று காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பருவமழையில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் 23-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு குறைவு. இந்த காலகட்டங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனைத் தொடர்ந்து 23-ந்தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கு அடுத்த 2 நாட்களில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 25-ந்தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story