தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கிய நிலையில், நடப்பு மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியை கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு அதாவது 19-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பை வழங்க இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை (திங்கட்கிழமை) கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மிக கனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் மூலம் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது.






