வங்கக்கடலில் முன்கூட்டியே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி முன்கூட்டியே உருவாக வாய்ப்பு உள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் நிகழ்வு 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உருவாகும் என சொல்லப்பட்டிருந்தது. அதாவது தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் ஆகியவற்றை நிகழ்வுகள் என்று குறிப்பிடப்படுகிறது. இது நல்ல மழையை கொடுக்கும்.
அந்த வகையில் 24-ந்தேதி வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, முன்கூட்டியே 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகக் கூடும் என ஆய்வு மையத்தால் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.
அதன்பிறகு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது அடுத்தக்கட்டமாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ மாறுமா? என்பதை அந்த நேரத்தில் வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.
இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழ்நாட்டில் நிச்சயம் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் நிகழ்வுகள் மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் அது மழையை கொடுக்கக்கூடியதாகவே இருக்கும். கடலோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகிறது. இது வடகிழக்கு பருவமழையை மேலும் தீவிரப்படுத்தும்.






