அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது புயல்.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது புயல்.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என்றும், இது சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகி வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி புயல் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி வரும் என்றும், புயலால் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் இந்த புயலுக்கு 'தித்வா' என்று பெயரிடப்பட உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புதிய புயலுக்கு பெயர் தித்வா

புயல் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டும் வழக்கம் இருக்கிறது. ஆனால் புயல் உருவான பின்னர் தான் அந்த பெயரை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். ஆனால் இதற்காக 13 உறுப்பு நாடுகள் ஏற்கனவே பெயரை பட்டியலிட்டு வழங்கியிருக்கிறது. அந்த அட்டவணையின்படி, தற்போது இலங்கை அருகே உருவாகும் புதிய புயலுக்கு தித்வா' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து இருக்கிறது. தித்வா' என்ற பெயருக்கு அரபு மொழியில் தீவு' என்ற அர்த்தம் சொல்லப்படுகிறது. ஏமனுக்கு அருகில் உள்ள சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராக கூட இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com