உக்ரைனின் மற்றொரு கிராமம் எங்கள் பிடியில்... ரஷியா அறிவிப்பு

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைனின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு, உதவ தயார் என புதின் சமீபத்தில் கூறினார்.
மாஸ்கோ,
உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் முயற்சியில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைனின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு, உதவ தயார் என புதின் சமீபத்தில் கூறினார்.
இதற்காக, அமெரிக்காவில் முடக்கி வைக்கப்பட்டு உள்ள ரஷிய சொத்துகளை தருவதற்கு தயார் என்றும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இதற்கான சாத்தியங்கள் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் கூறினார்.
இந்த நிலையில், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், உக்ரைனின் வடமேற்கே கார்கிவ் பகுதியில் அமைந்த ஸ்டாரைட்சியா என்ற கிராமம் முற்றிலும் எங்களுடைய படைகளின் வசம் வந்து விட்டது என தெரிவித்து உள்ளது.
உக்ரைனின் நீண்டதூர டிரோன் தளங்கள் மற்றும் எரிசக்தி மையங்களின் மீது நள்ளிரவில் பெரிய தாக்குதலை ரஷிய படைகள் நடத்தி உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது. ஒரு புறம் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை என கூறி வரும் ரஷியா, மறுபுறம் தொடர்ந்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருவது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.






